By Shanmuganathan kokulaselvan ( Idaikkadu) on July 4, 2026
யா/இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்
ஒரு பாடசாலையின் நூற்றாண்டு விழா என்பது ஒரே ஒரு தடவை கொண்டாடப்படுவது .அனைத்து மாணவர்களுக்கும் அவ்விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைப்பதில்லை .தாய்க்கு நிகராக நமது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளம் இடுவது பாடசாலைகளே ஆகும் .அவ்வாறே யா/ இடைக்காடு மகா வித்தியாலயம் தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை 24 25 26 ஜூலை 2026 கொண்டாட இருக்கிறது
ஒரு கிராமத்து பாடசாலை நூற்றாண்டு விழா காண்பதுடன் பல்வேறு அறிஞர்களையும் புத்தி மான்களையும் கல்வியலாளர்களையும் உருவாக்கிய சரித்திரம் கொண்டது. உயர்தரம் தொடங்கிய ஆண்டிலேயே 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிய சிறப்பு கொண்டது .இதன் காரணமாகவே மத்திய கல்வி அமைச்சால் ஒரு நூலகமும் ஒரு எரிவாயு உற்பத்தி செய்யும் பெரிய தொகுதியையும் நன்கொடையாக பெற்றுக் கொண்டது .அன்றிலிருந்து இன்று வரை இடையறாது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது தவறுவதே இல்லை
என்னை பொறுத்தவரையில் எனது வாழ்வும் எழுச்சியும் முயற்சியும் பாடசாலையிலேயே விதையிடப்பட்டது காலையில் பாடசாலைக்கு வந்தால் முடிந்து வீடு திரும்பி பின்னால் மாலை வேலைகளில் பாடசாலை மைதானத்தில் விளையாடி இரவு நேரத்தில் பாடசாலை மைதானத்தில் படுத்து உறங்கி மனைப் பொருளியல் அறையில் தேனீர் தயாரித்து அங்கேயே அருந்தி இரவு 10 மணிக்கு வீடு வரும் வரை பாடசாலையே கதியாய் கிடந்தோம். நான் மட்டுமல்ல எனக்கு மூத்தோரும் எனக்கு இளையோரும் அந்த கிராமத்தின் அனைத்து மாந்தரும் பாடசாலையை சுற்றியே தமது இளமை காலத்தை கழித்தனர் .இரவு நேரங்களில் பாடசாலை மதிலோரத்தில் சாய்ந்த வண்ணம் கதை பேசும் மாந்தரை இப்போதும் காணலாம் .விடுமுறை காலங்களில் பாடசாலையை சுத்தம் செய்யும் மூத்தோரையும் இளையோரையும் இப்போதும் பார்க்கலாம் இடைக்காடு வாழ் மாந்தர் அன்றி அயல் ஆன அச்சுவேலி கதிரிப்பாய் பத்தமேனி வளலாய் தொண்டமான்ஆறு பலாலி மைலிட்டி போன்ற அயல் கிராம மக்கள் கூட இப்ப பாடசாலையை தேடி வந்த வரலாறு உண்டு .என்னை கேட்டால் நீ எவ்விடத்தில் இருந்தாலும் என்ன குறை தென்பட்டாலும் இப் பாடசாலையின் பழைய மாணவன் ஆயின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது என்பது உனது வாழ்வினது முக்கிய கடமையாகும். குறை சொல்லி புறம் சொல்லி எமது கடமையிலிருந்து வழுவுதல் என்பது ஓர் மன்னிக்க முடியாத குற்றம் மட்டுமின்றி காலத்தில் மாந்தர்விடும் தவறுகளிலும் ஒன்றாகும். இடைக்காடுவாழ் மக்களை பொறுத்தவரை அனைவரும் வீட்டில் இருந்த நேரத்தை விட பாடசாலையில் இருந்த இளமை பருவமே கூடுதலாய் அமையும். கல்வி வளர்த்தது மட்டுமின்றி காதல் வளர்த்ததும் ,கவிதை வளர்த்ததும் தமிழை பயின்றதும், வாழ்க்கை அமைத்ததும் இந்தப் பாடசாலையில் நீங்கள் பெற்ற ஓர் வரமாகவே அமையும். நீங்கள் செய்யும் தொழிலில் அடித்தளம் இப்பாடசாலையில் இடப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள் ஓரிரு தவறுகளை சுட்டிக்காட்டி ஒதுங்கி விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் வாழ்க்கையின் ஒரு தடவை வரும் நூற்றாண்டு விழாவை தவறவிடாது கலந்து கொள்ளுங்கள் மகிழ்ந்து கொள்ளுங்கள் . உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் குறைகள் தேடி புறம் கூறுவதை விடுத்து நன்றி சொல்ல கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றை தவறவிடாது கலந்து சிறப்பியுங்கள் .
அனைவரும் வாழ்க வளமுடன்
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தனை வளர்த்ததும் இங்கேயே என்னை வளர்த்ததும் இங்கேயே என் வாழ்வும் இங்கேயே. வாழ்க்கை துணையும் இங்கேயே. இதற்கு மேலும் என்ன தேவை இங்கே"